Tuesday, June 28, 2011

வன்முறைகளுக்கெதிரான எழுத்தும் இயக்கமும் [முழுமையான வடிவம்] ) - கருணாகரன்

யோ. கர்ணனின் “தேவதைகளின் தீட்டுத்துணி” 
வன்முறைகளுக்கெதிரான எழுத்தும் இயக்கமும்


 -    கருணாகரன்
01
 ரு நூலுக்கான முன்னுரையை எழுதியவரே அந்த நூலுக்கான மதிப்புரையையும் அல்லது விமர்சனத்தையும் எழுத வேண்டிய அவசியத்திலிருப்பதென்பது ஒரு கொடுமையான சூழலே. யோ. கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்ற சிறுகதை நூல் வெளியாகி ஏறக்குறைய பத்து மாதங்களாகின்றன. ஆனால், இந்தப் பத்து மாதங்களில் இந்தப் புத்தகத்துக்கு வந்த விமர்சனங்கள் மிகமிகக் குறைவே. ‘புதுவிசை’யில் தேவா என்பவர் ஒரு விமர்சனத்தை எழுதியிருக்கிறார். ‘ஆனந்த விகடன்’ கடந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக இந்தக் கதைத் தொகுதியைத் தேர்வு செய்திருக்கிறது. அவ்வளவுதான். மற்றும்படி இந்த நூல் பொதுத்தளத்தில் வைத்து விவாதிக்கப்படவில்லை. அவ்வாறு விவாதிப்பதற்குத் தமிழ்ச் சூழல் விரும்பவும் இல்லை. அதற்குத் தயாராகவும் இல்லை. (ஏறக்குறைய த. அகிலனின் ‘மரணத்தின் வாசனை’யும் இப்படித்தான் மௌமாக்கப்பட்டுள்ளது).
ஆனால், இன்றைய தமிழ்ச் சூழலில் யோ. கர்ணனின் இந்தப் புத்தகம் முக்கியமான ஒன்று. எழுத்திலும் அது கூறுகின்ற சேதிகளிலும் அது செய்கின்ற காலப் பதிவிலும் அது கொண்டிருக்கிற அனுபவத்தளத்திலும் அதன் மெய்யிலும் இந்தப் புத்தகம் தன்னுடைய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
குறிப்பாக ‘முள்ளிவாய்க்கால்’ என இன்று பெரும்பாலான தமிழர்களால், அரசியலுக்காக எடுத்தாளப்படுகின்ற நிலப்பகுதியையும் ‘முள்ளிவாய்க்கால்’ என்று அடையாளப்படுத்தப்படக் காரணமான காலப்பகுதியையும் அங்கே நடந்த அரசியல் நிகழ்ச்சிகளையும் அவற்றின் விளைவுகளையும் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ பேசுகிறது. யோ. கர்ணன் அந்த நிலப்பகுதியில், அந்தக் காலப்பகுதியில், அங்கே நடந்த அந்த அரசியல் நிகழ்ச்சிகளின் போது, அவற்றின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர். என்றவகையில் தன்னுடைய அனுபவங்களைத் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’யில் பதிவு செய்துள்ளார்.
இன்னும் சற்று அழுத்தமாகச் சொன்னால், ஈழப்போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மெய் விவரிப்பு ஆவணமாக ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ அமைந்துள்ளது. போருக்குப் பின்னர் வெளியாகிய ஈழத்தின் இறுதிப் போர் பற்றிய முதற்புத்தகமாகவும் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’யே உள்ளது.
ஆனால், இந்த முக்கியமான புத்தகத்தைத் தமிழ்ச் சூழல் மிகச் சாதுரியமாகக் காணாதிருக்கிறது. அல்லது கண்டும் காணாததைப் போல இருக்கிறது. இது தமிழ்ச் சூழலின் பொது இயல்பு மட்டுமல்ல, அதனுடைய ‘கள்ளக்குணம்’ என்றே சொல்ல வேணும்.
ஏனெனில், இது போன்ற ‘கள்ளக் குண’த்தைத் தமிழ்ச் சூழல் தன்னுடைய சிறப்பியல்பாக அரசியலிலும் இலக்கியத்திலும் வாழ்விலும் கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணங்கள் ஏராளமுண்டு.
ஒரு உதாரணம் - ஈழத்து இலக்கியத்திலும் புலம் பெயர் இலக்கியத்திலும் இன்று மறுக்க முடியாதவை ஷோபாசக்தியின் எழுத்துகள். இன்றைய தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான ஆளுமை ஷோபாசக்தி. என்றபோதும் அதிகமான ஈழத்தமிழர்களால் - குறிப்பாக இலங்கையிலுள்ள தமிழர்களால் ஷோபாசக்தியின் எழுத்துகள் படிக்கப்படவில்லை. இதற்குப் பிரதானமான காரணம், இலங்கையின் பொதுவான – பிரபலமான ஊடகங்கள் ஷோபாசக்தியின் எழுத்துகளைப் பிரசுரிக்கவில்லை. அல்லது பிரசுரிக்கத் தவறுகின்றன@ முக்கியமாக அவற்றைப் பிரசுரிக்க அவை விரும்பவில்லை. ஆகவே பொதுவாக அவை அவற்றை மறைக்க முற்படுகின்றன. இது தனியே ஷோபாசக்திக்கு மட்டும் நேர்ந்த அநீதியல்ல. அல்லது இந்தப் போக்கினால் ஷோபாசக்தி மட்டும் பாதிக்கப்பட்டவரல்ல. ஏனைய படைப்பாளிகளான சக்கரவர்த்தி, திருமாவளவன், கற்சுறா, த. அகிலன், சுகன், நட்சத்திரன் செவ்விந்தியன், பிரதீபா, தான்யா   உள்ளிட்ட பலருக்கும் ‘எக்ஸில்’, ‘உயிர்நிழல்’, ‘சரிநிகர்’, ‘தினமுரசு’ போன்ற இதழ்களுக்கும் பத்திரிகைகளுக்கும் நேர்ந்த கதி இதுவாகும். ஒரு காலம் சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றவர்களுக்கும் இந்தக் கதிதான் நேர்ந்தது.
ஆகவே இந்தக் ‘கள்ளக் குண’த்தினால் பல ஆளுமைகளும் அவர்களுடைய முக்கியமான வெளிப்பாடுகளும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
நாம் இப்போது ஷோபாசத்திக்கு நேர்ந்ததை இங்கே அவசியம் கருதிப் பார்ப்போம். ஷோபாசக்தியின் எழுத்துகளை இலங்கையின் பொதுவான அரங்குகளிலும் விமர்சன முன்வைப்புகளிலும் பெரும்பாலானவர்கள் பேசுவதில்லை. ஈழத்தின் எந்த முக்கியமான விமர்சகரும் ஷோபாசக்தியையும் அவருடைய எழுத்துகளையும் மையமாக வைத்தோ முழுமைப்படுத்தியோ விமர்சனங்களை மேற்கொள்ளவுமில்லை. இதையிட்டெல்லாம் இவர்கள் வெட்கப்படவோ வருந்தவோ இல்லை. (ஏன், திருமாவளவன், வாசுதேவன், சக்கரவர்த்தி போன்றோருடைய எழுத்துகளுக்கும் குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் எழுதப்படவில்லை. கடந்த ஆண்டு வெளியாகிய ‘ஒலிக்காத இளவேனில்’ என்ற பெண்களின் கவிதைகள் அடங்கிய தொகுதி முக்கியமான ஒரு நூல். ஆனால், அதையும் நமது தமிழ்ச் சமூகம் இன்னும் அறியவேயில்லை).
மட்டுமல்ல, இலங்கையிலிருந்து வந்த அல்லது வந்து கொண்டிருக்கின்ற எந்தப் பத்திரிகையோ இலக்கிய இதழ்களோ ஷோபாசக்தியை அறிமுகப்படுத்தவும் இல்லை. அவருடைய எழுத்துகளைப் பற்றி முறையாக விவாதிக்கவும் இல்லை.
அப்படிப் பேசி, அவருடைய எழுத்துகளை அறிமுகமாக்கியிருந்தால் இன்று பெரும்பாலான வாசகர்கள் ஷோபாசக்தியை அறிந்திருப்பர். அவர் முன்வைத்த அரசியலைப்பற்றியும் அதன் உண்மைத் தன்மையைப் பற்றியும் தெரிந்திருப்பர். ‘மாற்று’ வகை இலக்கியம் குறித்த விரிவான பரிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து ஒரு விவாதச் சூழல் - சிந்தனைச் சூழல் உருவாகியிருக்கும். ஜனநாயகச் சூழல் என்பதும் அறிவியல் நேர்மை என்பதும்  அப்படித்தான் இருக்கும். ஆனால், இதெல்லாம் நடக்கவில்லை. இந்த நிலைமையில்தான் ‘நூறாவது இதழ்’ என்ற பெருமிதங்களும் ‘இருபத்தைந்தாவது மலர்’, ‘நாற்பதாவது ஆண்டு மலர்’ என்ற பூரிப்புகளும் நமது அரங்கில் நடந்தேறுகின்றன.
இத்தனைக்கும் ஷோபாசக்தி எழுதத்தொடங்கி இப்போது இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரையில் அவருடைய எட்டுப் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. சில புத்தகங்கள் மீள் பதிப்புச் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது. என்றபோதும் அவர் இன்னும் ஈழத்தமிழ்ச் சூழலில் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஆனால், ஷோபாசக்தி இரகசிய அரங்கில் அதிகமானவர்களால் வாசிக்கப்படுகிறார். இந்த வாசிப்பு திருட்டுத்தனமானது. அதாவது இரகசியமாக வாசிக்கப்படும் வாசிப்பு. இதன் அர்த்தம் அவர், கள்ளத்தனமாக உள்ளுக்குள்ளே ரசிக்கப்படுகிறார் என்பதே. (‘இது கள்ளப் பெண்டாட்டி உறவுக்கு ஒப்பானது’ என இதை ஒரு நண்பர் கூறுகிறார். கள்ளப்பெண்டாட்டியின் சுகத்தை ருஸிக்கின்றவர்கள் அவளுடைய உறவைப் பகிரங்கமாகப் பொது இடங்களில் காட்டிக் கொள்வதில்லை. இந்தப் போக்கை தமிழ் அரசியலிலும் காணலாம். முன்னர் தொடக்கம் இன்றுவரை லாபங்களுக்காக அதிகாரத் தரப்பை இரகசியமாக அணுகுகின்ற பலர் பின்னர் அந்த உறவைப் பகிரங்கமாகக் காட்டிக் கொள்வதில்லை).
எனக்குத் தெரிந்த அளவில் ஷோபாசக்தியின் எழுத்துகளை தீவிர வெறியோடும் விருப்பத்தோடும் பலர் தேடுகிறார்கள். தங்களுடைய புத்தக அடுக்குகளில் ஷோபாசக்தியின் புத்தகங்களுக்கு நிரந்தரமான – விசேட இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். ஷோபாசக்தியின் புதிய புத்தகம் வெளிவந்து விட்டது என்று அறிந்தால் அந்தப் புத்தகத்தை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்று இவர்கள் பறந்தடிக்கிறார்கள். (சக்கரவர்த்தியின் எழுத்துகளுக்கும் இப்படியொரு ‘கிராக்கி’ இருக்கிறது).
விடுதலைப் புலிகளை ஷோபாசக்தி அதிகமதிகம் விமர்சித்திருந்தாலும் அவர்களில் அநேகர் - குறிப்பாக முக்கியமான தலைவர்கள் - ஷோபசக்தியின் எழுத்துகளை முதலில் படிக்கிறவர்களாகவும் அவற்றைத் தேடிக் கொண்டிருப்பவர்களாகவுமே இருந்தார்கள். சில சமயம் புத்தகத்தை அவர்கள் அது அச்சிடப்படும் இடத்திலிருந்து வெளி வந்தவுடனேயே – சந்தைக்குப் போவதற்கு முன்னரே - எப்படியோ எடுத்து விடுகிறார்கள். ஒரு நண்பர் சொன்னார், ‘சிலவேளை அந்தப் புத்தகம் ஷோபாசக்திக்குக் கிடைக்க முன், இங்கே (ஈழத்தில்) புலிகளுக்குக் கிடைத்து விடுகிறது’ என்று. (இந்த மாதிரி ஒரு ஈர்ப்போடும் எதிர்பார்ப்போடும் முன்னர் தினமுரசுவும் சரிநிகரும் இருந்தன என்பதையும் இங்கே நிச்சயம் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பத்திரிகைகளை அப்போது வன்னியில் புலிகளே அதிகமாக வாசித்தார்கள். இவை அன்று பொதுமக்களுக்குக் கிடைக்காத வகையில் தடை விதிக்கப்பட்டிருந்தன).
இதற்குக் காரணம், உண்மையை அறியும் ஆவல். அதிலும் தங்களால் பேச முடியாத உண்மையை இன்னொருவர் பேசும்போது அதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல். உண்மையில் இது கொடுமையானது@ குரூரமானது. எந்தக் காரணத்தினாலும் ஒருவர் உண்மையைப் பேச முடியாத நிலை இருப்பதென்பது கொடுமையானதே. இது அனுதாபத்திற்கும் கருணைக்கும் உரியது. அதேவேளை அந்த உண்மையை இன்னொருவர் பேசும்போது, அத்துடன் உண்மையைப் பேசமுடியாத நிலையைப் பற்றிய விமர்சனங்களைத் துணிச்சலோடு வைக்கும்போது அதை ரசிக்கின்ற மனம், அந்த உண்மையைப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளவும் அந்த உண்மையை உரைப்பவரை அங்கீகரிக்கவும் தயாராக இருப்பதில்லை. இதுதான் குரூரமானது. அநீதியானது. கோபத்தை ஏற்படுத்துவது.
ஆனால், எப்படியோ இந்த இடத்தில் ஒரு போர் வீரனைப் போலவும் ஒரு தீரமிக்க சாகஸக்காரனைப் போலவும் ஷோபாசக்தி இவர்களால் உணரப்படுகிறார். என்பதால், எல்லாவகையான புறக்கணிப்புகளுக்கும் அப்பால், எல்லாவகையான அச்சுறுத்தல் மற்றும் அபாய நெருக்கடிகளுக்கும் அப்பால் துணிச்சலோடு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியாக ஷோபாசக்தி இருக்கிறார் என்ற வியப்பு காந்த விசையாக இவர்களை ஈர்த்துக் கொள்கிறது. எல்லோரும் இப்படிப் புரிந்து கொள்ளாவிடினும் துணிச்சலோடு உண்மைகளுக்கு நெருக்கமாகவும் மாற்றபிப்பிராயமாகவும் ஷோபா எழுதிக் கொண்டிருப்பதை இவர்களால் புறக்கணிக்க முடியவில்லை.
எனினும், இந்தச் சந்தர்ப்பத்திற் கூட இவர்கள் அந்தப் படைப்பாளியை, அவருடைய துணிச்சலை, அறத்தின் மீதும் வரலாற்றின் மீதும் நம்பிக்கை வைத்து இயங்கி வரும் எழுத்தியக்கத்தைப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாகயிருக்கிறார்கள்.
இந்த மனத்தடைதான் அதிகமான ஈழத்தமிழர்களின் பிரச்சினையே. இந்தப் பிரச்சினையிலிருந்தே அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள்@ எல்லாவற்றையும் அணுகுகிறார்கள். அரசியலை, இலக்கியத்தை, வரலாற்றை, தங்களின் நண்பர்களை, எதிரிகளை எனச் சகலரையும். ஏன், தங்களையே அவர்கள் இப்படித்தான் பார்க்கிறார்கள்.
இதெல்லாம் ஒருவகையான உளவியற் பிரச்சினை. பொதுவாகவே பல்வேறு உளவியல் நெருக்கடிகளால் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றித் தாங்களே போட்டிருக்கும் தடைகளும் மாயச் சுவர்களும் அவர்களைப் பலவிதமாகக் கூறு போட்டிருக்கின்றன. பல வகையான அகமுரண்களால் அவர்கள் பின்னப்பட்டிருக்கிறார்கள். என்பதாலேயே இந்த மாதிரியான குழறுபடிகளும் தவறுகளும் நேர்கின்றன. இந்த அகமுரண்களின் பின்னலில் சிக்கியிருப்பதால் இவர்களால் ஒரு வெளிப் பிரதேசத்துக்கு இலகுவில் பயணிக்க முடியாதுள்ளது.
அதிகமான தமிழர்கள் எப்போதும் ‘கள்ளக் குணத்தைக் கொண்டவர்கள்’ என்று முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். மனமறிந்த உண்மையை, ‘பளிச்’செனத் தெரிகின்ற உண்மையை, தம்முடைய அறிவுக்கும் மனச்சாட்சிக்கும் தெரிந்த நியாயத்தையே அவர்கள் அங்கீகரிப்பற்குத் தயங்குவதில் ஒரு போதுமே வெட்கப்படுவதில்லை. அதாவது சூரியனைக் கைகளால் மறைப்பதையிட்டு இவர்கள் வெட்கமடைவதில்லை.
‘சூரியனைக் கைகளால் மறைக்க முடியாது’ என்று தெரிந்தும் கைகளை விரித்துச் சூரியனை மறைக்க முற்படுவோரைக் குறித்து என்ன சொல்ல முடியும்? அவ்வாறு செயற்படும் போக்கை ஆதரிப்பதையிட்டும் என்ன கூறமுடியும்? இது ஒரு வகையான மனவியாதியன்றி வேறென்ன? இங்கே கொடுமை என்னவென்றால், அப்படிக் கைகளால் சூரியனை மறைக்க முற்படுவோரையே தமிழ்ச் சூழலில் பெரும்பான்மையானோர் கொண்டாடுகின்றனர். அவர்களே அரசியல் தலைவர்களாகவும் சிறந்த ஆய்வாளர்களாகவும் பிரதான ஊடகவியலாளர்களாகவும் அரசியல் விமர்சகர்களாகவும் இலக்கிய விற்பன்னர்களாகவும் தமிழின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களாகவும் தீர்க்கதரிசிகளாகவும் காட்டப்படுகிறார்கள். அல்லது அவர்கள் தம்மை அப்படிக் காட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கே தமிழ்ச் சமூகத்தில் மிகப் பெரிய அங்கீகாரமும் கிடைக்கிறது.
எனவே இத்தகையதொரு பின்னணியில்தான் யோ. கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’யையும் தமிழ்ச் சூழல் இலகுவாகப் புறக்கணித்திருக்கிறது@ கவனிக்காததைப் போல விடப்பட்டிருக்கிறது எனலாம். அல்லது அது ரகசியமாக உள்ளுக்குள்ளே வைத்து ரசிக்கிறது. எல்லாவற்றுக்கும் அப்பால், தான் அறிய விரும்புவதைத் தேடிக் கொண்டிருக்கிறது@ உண்மைகளைக் கண்டறியும் விருப்பத்துக்குத் தீனியாக அதை வைத்துக்கொள்கிறது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளமுடியும். என்னதான் உண்மைகள் கசப்பானதாக இருந்தாலும் அதை அறிய வேணும் என்ற உள் விருப்பத்தைத் தணிக்கவே முடியாது. இதனால்தான் உண்மைகளை மறைப்போர் அதிகமாகத் தாம் மறைக்க விரும்புகின்ற உண்மைகளை அதிகமாக விரும்புகின்றனர். இவர்களே உண்மையின் அதீத விருப்பாளர்களாகவும் இருக்கின்றனர்.
ஆனால், உண்மையில், இவ்வாறு ‘வெளிப்படுத்தப்படும் உண்மைகளிலிருந்தே நாம் நமது படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்ற எளிய விளக்கத்தைக் கூட இவர்களுடைய மனம் ஏற்றுக் கொள்வதில்லை. பொய்களாலும் புனைவுகளாலும் எல்லையற்று அலைக்கழிக்கப்படுவதையிட்ட வருத்தமும் இவர்களிடம் இல்லை. இந்த இடத்தில் ஒரு கேள்வியை இவர்கள் கேட்க முடியும். ‘ஷோபாசக்தியோ, யோ. கர்ணனோ அல்லது இவர்களைப் போன்றோரோ நிச்சயமாக உண்மைகளைச் சொல்கிறார்களா?’ என்று. இந்த எழுத்துகள் எல்லாம் உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பதை அறிவதற்கு முதலில் இவற்றைப் பொது வெளியில் வைப்பதற்கும் அந்த வெளியில் வைத்து விவாதிப்பதற்கும் எல்லோரும் தயாராக வேணும். அப்படிப் பொதுவெளியில் வைத்து விவாதிக்கும்போது, நிச்சயமாக இவற்றின் உண்மை நிலை என்னவென்று தெரியும். ஆனால், அதற்குத்தான் யாரும் தயாராக இல்லையே! காரணம், தாங்கள் நம்புகின்ற ‘ஏதோ சிலவற்றுக்காக’ அதற்கு அப்பாலான எந்த விசயத்தையும் அங்கீகரிப்பதற்கு இவர்கள் தயாராகவில்லை. அத்துடன், இவர்கள் தாங்கள் அடையாளப்படுத்த விரும்புகின்ற தரப்புக்குப் பாதிப்பு வந்து விடக்கூடாது எனவும் எதிர்பார்க்கின்றனர்.
இது ஒரு பக்கம். மறு பக்கத்தில், இந்த எழுத்தாளர்களின் இயங்கு தளம் இலக்கியம் என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை. ஆகவே, அந்தத் தளத்தில் நின்று கொண்டு, இந்த எழுத்தாளர்கள் தங்கள் சூழலின் நிகழ்ச்சிகளை – அந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் விளைவுகளை, அந்த விளைவுகளின் நன்மை தீமைகளை எழுதுகிறார்கள். ஒரு சாட்சியாகத் தங்களின் பதிவுகளை இவர்கள் செய்கின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேணும். ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், இந்தச் சாட்சியத்தையே தமிழ்ச் சூழல் விரும்பவில்லை. தமிழ்ச்சூழலுக்கு எப்பொழுதும் சாட்சிகள் - சாட்சியங்கள் விருப்பத்துக்குரிய ஒன்றாக இருப்பதில்லை என்று ஒரு நண்பர் அடிக்கடி சொல்வதை இங்கே குறிப்பிடலாம். சாட்சியங்களில்லாத வரலாற்றையே தமிழர்கள் விரும்புகிறார்கள். பதிலாக சார்பான வாதங்களையே தமிழ்ச் சூழல் விரும்புகிறது. சாட்சிகளில்லாத வரலாறு என்பது அதிகமதிகம் மாந்திரீகத்தன்மை நிரம்பியதாகவே இருக்கும். இன்னொரு வகையில் அது குரூங்கள் நிறைந்ததாக இருக்கும். அதில், அதிகாரம் குவிந்திருக்கும்.
இந்த இடத்தில் நான் மேலும் ஒரு விசயத்தைக் குறிப்பிடலாம் என விரும்புகிறேன்.
ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’, ‘விஷ்ணுபுரம்’, ‘மாடன்மோட்சம்’, ‘பத்மவியூகம்’  போன்றவை  ஈழத்தின் சமகால அரசியல் சமூக நிகழ்ச்சிகளை அப்படியே பிரதிபலிப்பதாகவே நான் உணர்கிறேன். இலக்கியத்தின் சிறப்பியல்பே இதுதானே. அது காலம், இடம் என்பவற்றுக்கு அப்பால், எங்கும் எப்போழுதும் பொருந்தக் கூடிய ஆன்மாவைக் கொண்டிருக்கிறது என்பது.
ஜெயமோகன் நேரடியாக, ஈழ அரசியலை, அதற்குரிய சம்பவங்களோடும் இடத்தோடும் காலத்தோடும் இவற்றில் பதிவாக்கவில்லை. மட்டுமல்ல, ஈழ அரசியலை மையப்படுத்தி அவர் இந்தக் கதைகளை எழுதவுமில்லை. ஆனால், ஈழ நிகழ்ச்சிகள் அவருக்கு இந்தக் கதைகளை எழுதக்கூடிய உந்துதலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர், அதற்கான தடங்களை வேறு சூழலில் கட்டமைக்கிறார். ஆகவே அவருடைய கதைகள் வேறு காலங்களிலும் வேறு சூழலிலும் கட்டமைக்கப்படுகின்றன.
ஷோபாசக்தியோ யோ. கர்ணனோ, த. அகிலனோ, சக்கரவர்த்தியோ, நட்சத்திரன் செவ்விந்தியனோ அப்படிச் செய்யவில்லை. இவர்கள் நேரடியாகவே ஈழத்தின் சமகால நிகழ்ச்சிகளிலும் அதன் அரசியலிலும் தளமிடுகிறார்கள். சமகால மனிதர்களை மையப்படுத்துகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் இந்தச் சமகால நிகழ்ச்சிகளில் பலரும் பங்காளர்களாகவும் ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் என்ற வகையிலும் இருப்பதால் இவர்களுடைய எழுத்தின்மீது கடுமையான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டிய ஒரு நிலை இந்தச் சமகால மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் உண்மையில் நடக்கிறது.
இங்கே பிரச்சினை என்னவென்றால், உண்மைகளை அறிவதற்கு அப்பால், இலக்கியத்தை வாசிப்பதற்கு அப்பால், ‘கட்சி அரசியல்’ மனோபாவத்துடன் மட்டும் எழுத்துகள் அணுகப்படுகின்றன. கட்சி மனோபாவத்தில் ‘சார்பு – எதிர்ப்பு’ என்ற இரண்டு நிலைப்பாடுகளே இருக்க முடியும். இதற்கு இன்னொரு வலுவான காரணமாக நாம் சொல்லக் கூடியது, கடந்த பல ஆண்டுகால ஈழத்தமிழரின் அரசியல் மற்றும் வரலாற்று நோக்கு என்பது, ‘கறுப்பு – வெள்ளை’ என்ற அடிப்படையில், தட்டையாகப் பார்க்கப்படுவதேயாகும். இதற்கப்பால் ஒரு பொதுப் பார்வையை – பன்முகப்பார்வையை – ஜனநாயக அடிப்படையிலான அணுகுமுறையைத் தமிழ்ச்சூழல் அதிகம் கொள்ளவில்லை. இதனால் கலை, இலக்கியத்தின் அடிப்படைகளே கோணலாக்கப்படுகின்றன. (வாழ்வே கோணலாக்கப்படும் போது கலை, இலக்கியத்தைப் பற்றி என்ன சொல்வது?)
ஆகவே, இதெல்லாம் ஒரு வகையான வன்முறை நடவடிக்கைகளே. இந்த வன்முறையானது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்குவதால் மட்டும் நிகழ்வதில்லை. திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாலும் இருட்டடிப்புச் செய்யப்படுவதாலும் கூட நிகழ்கின்றன. உலகத்தில் அதி உச்சமான வன்முறை என்பது உண்மையை மறைப்பதாகவே இருக்கிறது. உண்மையை மறைப்பதிலிருந்தே அனைத்துத் தவறுகளும் அனைத்துக் கொடுமைகளும் நிகழத் தொடங்குகின்றன.
பலரும் புலிகளையும் அவர்களுடைய காலத்தையுமே வன்முறைக்கான அடையாளங்களாகக் காணுகின்றனர். இது தவறானதாகும். வன்முறையில் புலிகளுக்கும் ஒரு முக்கிய பங்கிருந்தாலும் பொதுவாகவே தமிழர்களிடத்தில் காணப்படும் ‘எதையும் ஆராயமல் எதிர்த்தல், புறக்கணித்தல், வசை பாடுதல், உண்மையை மறைத்தல்’ போன்ற அம்சங்கள் புலிகளையும் கடந்தவை. அவை தமிழ்ச் சமூகத்தில் மிக ஆழமாகவும் பரந்த அளவிலும் வேரோடிப் படர்ந்திருப்பவை. ஆதிக்கம் பெற்ற ‘மேற்சமூகம்’ தனக்கு உவப்பில்லாத விசயங்களை இந்த மாதிரிப் புறக்கணித்து இருட்டடிப்புச் செய்து, இந்த வன்முறையை நிகழ்த்தி வருகிறது. இந்த மேற்சமூகத்திற்கும் அதனுடைய உளவியலுக்கும் ஏனைய தரப்பினரும் தங்களையறியாமலே அடிமைப்பட்டு வருகின்றனர்.
யோ. கர்ணனின் இந்தக் கதைகளும் இப்போது ‘கறுப்பு - வெள்ளை’ அரசியலாளர்களின் பிடிக்குள் சிக்கியிருக்கின்றன. அதனால், இந்த அரசியலில் அவை முன்னிறுத்தி விவாதிக்கப்படவில்லை. ஏனென்றால், இந்தக் கதைகள் விவாதிக்கப்பட்டால், அல்லது விமர்சன அரங்கிற்கு எடுக்கப்பட்டால், இந்தக் கதைகளின் மையவாளர்களாகவும் பிரதான தரப்பினராகவும் இருக்கும் சனங்கள் சாட்சியமாகிடுவர். சனங்கள் சாட்சிகளாகும்போது உண்மைகள் நிரூபணமாகும். வலுப்பெறும். இதை இன்று ஆதிக்கம் செலுத்துகின்ற ‘மேல்நிலையாளர்கள்’ விரும்பவில்லை.
என்றபடியால்தான், கர்ணனின் கதைகள் ரகசியமாக்கப்பட்டிருக்கின்றன. பேசாது விடப்படுகின்றன. உண்மைகள் புதைகுழிக்குள் தள்ளப்படுகின்றன. ஆகவே மீண்டும் சொல்கிறேன், இந்த உலகத்தில் உண்மைக்கு எதிரான காரியங்களே மிகப் பெரிய வன்முறையாகும்.
கர்ணன் புலிகளின் இறுதி நாட்களையும் அதன் பின்னரான காலத்தையும் தன்னுடைய கதைகளில் மையப்படுத்தியிருக்கிறார். இந்தக் காலத்தின் நிகழ்ச்சிகளில் அவர் ஒரு பங்கேற்பாளன், அனுபவிப்பாளன், சாட்சி என்ற வகையில் தன்னுடைய அனுபவங்களை மையப்படுத்தி எழுதிச் செல்லும்போது அவரால் உண்மைகளையும் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மெய்யையும் மறைக்க முடியவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. அவருக்கு வரலாற்றின் மீது நம்பிக்கையிருக்கிறது. சனங்களின் மீது மதிப்பிருக்கிறது. வரலாற்றின் மீது நம்பிக்கையிருக்கும் எவரும் வரலாற்றைத் திரிக்கவோ வரலாற்றுக்குப் பொய்யுரைக்கவோ விரும்பார். அவ்வாறே, சனங்களை மதிப்பவர்கள் ஒரு போதும் சனங்களுக்குப் பொய் சொல்ல முனைய மாட்டார்கள். சனங்களுக்குத் தெரிந்த உண்மைகளை, சனங்களே பட்டு அனுபவித்த வாழ்க்கையின் மெய்யைத் திரித்துச் சொல்லுவதற்கான துணிவையும் அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாது. அப்படிச் சொல்ல முயலும்போது அது ஏதோ ஒரு வகையில் அதிகாரத்தையும் வன்முறையையும் கொண்டேயிருக்கிறது. உள்நோக்கங்களுடன், செயற்படுகிறது. சனங்களுக்கும் வரலாற்றுக்கம் எதிரானதாகிறது.
கர்ணன் வன்முறைக்கும் அதிகாரத்துக்கும் எதிரானவர் என்பதால், அவர் இதற்கு எதிராகவே இயங்குகிறார். அவர் சனங்களில் ஒருவர். வரலாற்றின் நிதானி.
00
‘தேவதைகளின் தீட்டுத்துணி’ சிறுகதை நூல் வெளிவந்த காலப்பகுதியை அண்மித்ததாகவே ஈழத்திலிருந்து உமா வரதராஜனின் ‘மூன்றம் சிலுவை’ நாவல் வெளிவந்துள்ளது. ஆனால், ‘மூன்றாம் சிலுவை’க்கு இதுவரையில் அதிகமான விமர்சனங்கள் வந்துள்ளன. நானும்கூட அந்த நூலுக்கான விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். ‘மூன்றாம் சிலுவை’க்கு விமர்சனத்தை எழுத முனைவோர் அல்லது அதற்கு விமர்சனங்களை முன்வைக்க விரும்புவோர் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’க்குத் தங்களுடைய விமர்சனங்களை எழுதத் தயாராயில்லை. த. அகிலனின் ‘மரணத்தின் வாசனை’யைப்பற்றிக் கூட இவர்கள் கதைக்க விரும்பவில்லை.
இதற்குக் காரணம், ‘மூன்றாம் சிலுவை’ மிகப் பிரச்சினைக்குரிய – அபாயகரமானதாகக் கருதப்படும் இலங்கையின் அரசியலைப் பேசவில்லை. அது பேசுகின்ற அரசியல் ஆண் - பெண் என்ற உறவில், பால்நிலையில் மையம் கொள்கிற அரசியல். ஆகவே அந்த அரசியலையும் அந்த உறவையும் பேசும் நாவலை விமர்சிப்பதில் இவர்களுக்குப் பெரிய தயக்கங்களில்லை. எனவேதான் ‘மூன்றாம் சிலுவை’க்குத் தமிழ்நதி தொடக்கம் அ. முத்துலிங்கம் வரை பத்துக்கு மேற்பட்டோர் தங்கள் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள்.
ஆனால், ‘தேவதைகளின் தீட்டுத் துணி’ அப்படியல்ல. அது நேரடியாகவே அரசியலைப் பேசுகிறது. அதிலும் போரின் அரசியலையும் - போரின் போது மீறப்பட்ட அனைத்து மனித விழுமியங்களையும் பேசுகிறது. அறத்துக்கு எதிரான நிகழ்ச்சிகளைப் பேசுகிறது. சனங்களின் பாதிப்புகளைப் பேசுகிறது. பொதுவாக, ‘போருக்கென நடந்த நிகழ்ச்சி’களை மறைக்க முற்படுவோரின் விருப்பங்களுக்கு மாறாக கர்ணன் தன் கதைகளை எழுதியிருக்கிறார். இது கர்ணன்; திட்டமிட்டுச் செய்த காரியம் இல்லை. அவர் எழுதத் தொடங்கும்போதே இயல்பாக வந்து அந்த நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் குவிகின்றன. ஏனெனில் அவருடைய நினைவுப் பரப்பெங்கும் அந்த நிகழ்ச்சிகளின் - அந்தச் சனங்கள் பட்ட அவலங்களின்; பதிவுகளே உள்ளன. அவருடைய மூளையில் இந்தப் பதிவுகளே அதிகமாக உண்டு.
ஆகவே, அந்த யுத்த நாட்களில், போர் நடைபெற்ற சூழலில் சனங்களோடு நின்ற ஒருவர் அந்த நிகழ்ச்சிகளுக்கு மாறாக எழுதவோ இயங்கவோ முடியாது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேணும். ‘உண்மைக்கு மாறாக எழுது’ என்று எப்படி ஒருவரை நிர்ப்பந்திக்க முடியும்? ‘சனங்களுக்கு மாறாக, அவர்கள் பட்ட வேதனைகளுக்கும் துயரங்களுக்கும் மாறாக எழுது’ என்று எவர் கூற இயலும்? அல்லது ‘எதையும் பேசாது மௌமான இரு’ என எப்படிக் கட்டளையிடமுடியும்? சனங்களையும் உண்மைகளையும் விடப் பெரியது எது? வன்னியில் போர் நடந்தபோது அந்தச் சூழலில் அங்கே வாழ்ந்த கர்ணனைப் போன்ற பிற படைப்பாளிகளும் ஏறக்குறைய கர்ணனைப்போலவே தங்கள் எழுத்தையும் வெளிப்பாடுகளையும் கொண்டிருக்கின்றனர்.
எனவே, கர்ணனின் கதைகள் எந்தத் தளத்தில் இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றின் பெறுபேறுகளை நாம் மதிப்பிடலாம்.
02
போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பற்றிய கதைகள் வரலாற்றில் ஏராளமுண்டு. இதிகாசக்கதைகளில் பலவும் போருடன், மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகளுடன், மோதல்களுடன் உள்ளதை நாம் அறிவோம். ஆனால், இதிகாசக் கதைகளில் சனங்களின் பாடுகள் மையாகப் பேசப்படுவதில்லை. அங்கே போரிடும் தரப்புகளும் அவற்றின் தலைமைகளும் மையப்படுத்தப்பட்டுப் பேசப்படுகின்றன. அதாவது அங்கே அதிகாரத் தரப்புகளே மையமாகப் பேசப்படுகின்றன. அதிகாரத் தரப்புகளுக்கிடையிலான முரண்களும் மோதல்களுமே இங்கே ஆதாரம்.
ஆனால், தற்காலப் போரில் சனங்களே மையப்படுத்தப்படுகிறார்கள். இங்கும் அதிகாரத்தரப்புகளே போரில் ஈடுபட்டாலும்  போரின் பாதிப்புகளைச் சுமக்கும் சனங்களே பெரும்பாலான சமகால இலக்கியங்களில் மையமாக்கப்படுகின்றனர். ‘இது சனங்களின் காலம்’ என்றபடியால் சனங்களின் பிரச்சினைகளும் துயரங்களும் மையப்படுத்தப்படுகின்றன.
எனவே இது ‘சனங்களின் காலம்’ என்றபடியால், சனங்களின் பிரச்சினைகளையும் துயரங்களையும் தன்னுடைய கதைகளில் மையமிடுகிறார் யோ. கர்ணன். அத்துடன் சனங்கள் தங்கள் அறிவிற்கும் விருப்பத்துக்கும் மாறாக நடத்தப்பட்டுப் பேரிழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்த நிலைமையை நேரிற் கண்டவர் என்ற வகையில் சனங்களுக்கு நேர்மையாகவும் அவர்களுக்குச் சார்பாகவும் இயங்குவது கர்ணனைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாதது.
ஆனால், இந்தக் கதைகளை வாசிக்கும் பெரும்பாலான தமிழ் வாசகர்கள், சனங்களின் துயரங்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் விட அதிகாரத்தரப்புகளைப் பற்றியே அதிகமும் சிந்திக்கிறார்கள். அதிலும் தாம் விரும்புகின்ற அதிகாரத்தரப்புகளைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கிறார்கள். ஆகவேதான் கர்ணனுடைய கதைகளையிட்ட அக்கறைகள் இவர்களுக்கு வரவில்லை. கர்ணனுடைய கதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தால், நிச்சயமாக அதிகாரத்தரப்புகளான விடுதலைப் புலிகளைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் நிச்சயமாகப் பேசியே தீரவேணும். அப்படிப் பேசும்போது, நிச்சயமாக இந்த இரண்டு தரப்பினாலும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும். அப்படிப் பேச இவர்களுடைய நாக்குக் கூசுகிறது. மனம் தயங்குகிறது. ஏனெனில் தமிழ்ச்சூழலில் பெரும்பாலானவர்கள், நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போல ‘கட்சி மனோபாவ’த்துடன் இருப்பதால், தமது தரப்பைப் பற்றிய விமர்சனங்களை ஏற்கவேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறார்கள். எனவேதான் கர்ணன் கண்டு கொள்ளப்படாதிருக்கிறார். கர்ணனின் கதைகள் ‘கண்டும் காணாமல்’ விடப்படுகின்றன.
ஆகவே -
சனங்களின் காலத்தில் சனங்களின் கதைகளைப் புறந்தள்ளி விட்டு சனங்களுக்கு விரோதமாகச் சிந்திக்கும் மக்களையும் மனோபாவத்தையும்  அதிகமாகக் கொண்ட ஒரு சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் மாறிவிட்டோம். இந்த இடத்தில், இன்று ஈழத் தமிழ்ச் சமூகம் அறிவிலும் அறத்திலும் கருணையிலும் வீழ்ச்சியடைந்த சமூகமாக மாறியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. அது அதிகமதிகம் வன்முறையிலும் அதிகாரத்திலும் ஈர்ப்பக் கொண்டுள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது. எனவே இந்த நிலையில் கர்ணனின் கதைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதைப் பற்றி நாம் கவலைப்பட முடியாது.
ஆனால், கர்ணனின் கதைகள் இலங்கைச் சூழலில் நிலவும் பல கற்பிதங்களைத் தகர்க்கின்றன. அரசியற் பெறுபேறுகளை எட்டுவதற்காக முன்னேயிருந்த தடைகளை நீக்குவதற்காக ‘வெடிகுண்டும் தகர்ப்பு’மாக இருந்த ஒரு சமூகத்தில், அதீதமாக உருவாகியுள்ள புனைவுகள் மட்டும் தகர்ப்படாதிருக்கின்றன. அந்தப் புனைவுகளைக் கர்ணன் ஒரு சாட்சியாக நின்று உண்மைகளின் மூலம் தகர்க்கின்றார். கர்ணனின் ஆயுதம் உண்மை. நடந்த உண்மைகள்.
‘உண்மையை மறுத்தல்’ என்ற வன்முறையை ‘சாட்சி’ என்ற பாத்திரத்தை வகிப்பதன் மூலமாக இந்தத்தகர்ப்பை அவர் சாத்தியப்படுத்த முயற்சிக்கிறார். கர்ணனின் பாத்திரம் இங்கே சாட்சி என்ற நிலையிலேயே அமைகிறது. உண்மையில் சாட்சிகளே இன்றைய உலகத்தில் பலவான்கள். சத்தியம் அவர்களிடமே மிஞ்சிக்கிடக்கிறது.
கர்ணன் ஒரு கதைசொல்லி என்ற வகையில் தன்னுடைய சாட்சிப் பாத்திரத்தை அதனுடன் இணைத்துக் கொள்கிறார். விளைவாக நமக்கு, சாட்சியமான கதைகள் கிடைக்கின்றன. ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ அத்தகைதொரு கதைகளின் தொகுப்பு. இந்தச் சாட்சியம் தனியே ஒரு கர்ணனின் சாட்சியம் அல்ல. பல ஆயிரம் மக்களின் சாட்சியம். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியம். வரலாற்றை யாரும் திரிவு படுத்த முடியாத உண்மை நிகழ்ச்சிகளின் சாட்சியம்.
இந்தத் தொகுதியில் வடக்கு ஈழத்தின் இன்றைய சமகால இளந்தலைமுறையின் பேச்சுவழக்கைப் பயன்படுத்தி இந்தக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ‘இயக்கக்கட்டுப்பாட்டுப் பிரதேசம்’ என்று சொல்லப்படும் வன்னிப் பிரதேசத்தில், இயக்கமும் மக்களும் பயன்படுத்தும் சொற்களில் - மொழியில் - இந்தக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, இயக்கத்தின் நடவடிக்கைகளும் மக்களின் வாழ்க்கையும் போரும் போரின் விளைவுகளும் உள்ளமைகின்றன. இதுதான் இந்தக் கதைகளின் சாரம். இது ஒரு புதிய பண்பாட்டு நிகழ்ச்சி. நவீனத் தமிழ் வாழ்விலும் எழுத்து முயற்சிகளிலும் இந்தப் பதிவுகள் இந்தப் புதிய பண்பாட்டு நிகழ்ச்சியாகின்றன.
கர்ணனின் இந்தக் கதைகளை வாசிக்கும் ஒருவர் அடைகின்ற நிம்மதியின்மையும் பதற்றமும் சாதாரணமானதல்ல. போர்க்களத்திலும் போர்க்காலத்திலும் நிலவுகின்ற பதற்றத்தைப் போலில்லா விட்டாலும் இந்தப் பதற்றமும் நிம்மதியிழப்பும் பெரிதே.
சகமனிதர்களைப் பற்றிய அக்கறையுள்ள எவரும் வரலாற்றை விளங்கிக்கொள்ளவே ஆசைப்படுவர். ஒரு சமூகத்தின்  எதிர்காலத்தைப் பற்றிய கரிசனையுடையவர்கள் வரலாற்றை அதன் திரைகளை விலக்கியே அறிய முற்படுவர். இவர்களுக்கு வரலாற்றில் அமைகின்ற பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் அவை கொள்கின்ற அர்த்தமும் முக்கியமானவை. இவர்களுக்குப் புனைவுகள் எதிர்மறையானவை.
00
‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்ற குறியீடு புனிதங்களின் வீழ்ச்சியையே குறிக்கிறது. ஒவ்வொரு தரப்பும் பிறர் மீது குற்றத்தைச் சுமத்தி விட்டு தமது புனிதங்களையே முதன்மைப்படுத்த முயற்சிக்கின்றன. ஆகவே இந்தக் கதைகள் இதுவரையில் கட்டப்பட்டிருந்த புனிதங்களைக் கட்டுடைத்துப் பேசுகின்றன என்பதை முதலிலேயே – நூலின் தலைப்பிலிருந்தே - புரிந்து கொள்ளமுடியும்.
போர் முற்றிச்செல்லும்போது சனங்களின் மனதில் ஏற்பட்ட உணர்வுகள் எப்படியிருந்தன என்பதை – அந்தத் துயர நாட்களிலும் என்னமாதிரியான எள்ளலோடும் நகைச் சுவை உணர்வோடும் சனங்கள் வாழ்ந்தனர் என்பதைக் கர்ணன் மிகச் சரியாகப் பதிந்திருக்கிறார்.
இத்தகைய உணர்வுகள் பல இடங்களில் - பல சந்தர்ப்பங்களில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் கர்ணனன். மரண நடனத்தின்போது - அந்தக் கொடிய சந்தர்ப்பத்திலும் உண்மையை எப்படி உணர்கிறது மனம்? அங்கே நிகழ்கின்ற நிகழ்ச்சிகளில் அர்த்தத்தையும் அர்த்தமின்மையையும் அது எப்படி மதிப்பிடுகிறது? என்பதை நாம் ஆச்சரியத்துடன் பார்க்கிறோம். இதுதான் மனதின் விசித்திரம். மரணக்குழிகளில் வீழ்ந்து மயிரிழையில் தப்பும் போதும் - உத்தரவாதங்களே வீழ்ச்சியடைகின்ற போதும் அது எப்பொழுதும் எதிலும் எப்படியோ உள்ளார்ந்தமாக விலகிநிற்கும் இயல்பைக் கொண்டிருக்கிறது. என்றபடியால்தான் அது சமநிலை குழம்பாமல் இருக்கிறது. இந்த உலகத்தின் பைத்தியக்காரத்தனங்களையெல்லாம் இந்த வேடிக்கைத்தனத்தாலான புரிதலின் மூலமே சமனிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது நமது மனம் என்ற அடிப்படையைக் கர்ணனன் தெளிவாக்குகிறார்.
பொதுவாகவே தனிப்பட்ட உரையாடல்களின்போதே கர்ணன் மிகவும் நகைச்சுவையாகப் பேசுவார். எதையும் ஒரு எள்ளலோடு நோக்கும் இயல்பு அவரிடம் உண்டு. மனித நடத்தைகளே அவருக்கு இத்தகைய கேலிப்படுத்தலைக் கொடுத்திருக்கக் கூடும். இந்த இயல்பையே இவருடைய கதைகளும் கொண்டிருக்கின்றன. ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்று அவர் இந்தப்புத்தகத்துக்குத் தலைப்பிட்டதிலேயே அவருள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் கோபத்தையும் அவரிடமிருக்கும் எள்ளலையும் நாம் உணரமுடியும்.
போர் பற்றிய ஏராளம் கதைகள் ரஷ்ய, சீன, வியட்நாமிய, ஈராக்கிய, ஈரானிய, ஆபிரிக்கச் சூழலில் அண்மைய கடந்த காலங்களில் உண்டு. ஆனால், சமகாலத் தமிழ்ச் சூழலில் அது ஈழத்தில் கர்ணனிடத்தில் மட்டுமே இப்போதிருக்கிறது.
என்றபோதும் 'சனங்களின் பாடுகளும் அங்கே நிலவிய நிலைமைகளும் தேவதைகளின் தீட்டுத்துணியில் அழுத்தமாகப் பதியப்பெறவில்லை. கர்ணனின் மொழியில் உள்ள மிக எளிய, சாதாரணத்தன்மை இந்தப் போர்க்கதைகளைச் சிலவேளை மேலோட்டமாக்குகின்றன என்ற அபிப்பிரயம் இந்தக் கதைகள் நிலவிய களத்தில் அக்காலப்பகுதியில் இருந்த சிலரிடம் உண்டு. அந்தச் சூழலில் இருந்த எள்ளலும்  துயரமும் அவலத்தின் பாடுகளும் உரியவாறு மேலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இதுதான் பிரச்சினையே. ஒரு சாரார் 'வாயைத் திறக்காதே' என்கின்றனர். இன்னொரு சாரார் 'நீ சொல்வது போதாது' என்கின்றனர்.
00                                                                                                                                                                                                            ....Photo: http://viz.cwrl.utexas.edu/node/343

No comments:

Post a Comment