Sunday, February 27, 2011

தேவதைகளின் தீட்டுத்துணி


காணிக்கை மலரின்ர புருசன்காரன் விட்டுட்டு போய் மூன்றாவது வருசம் பிறந்தவனான றொக்கட் அல்லது போர்ப்புலி என அழைக்கப்படுகின்ற கிறிஸ்துதாசன் ஒரு சிகப்பு கலர் லேலன்ட் பஸ்சில வந்து செட்டிகுளம் முகாமில இறங்கி வரிசையில போய் ஒரு சோத்துப்பாசல் வாங்கி ஒதுக்குப்புறமாக மர நிழலொன்று பார்த்துக் குந்தி சோத்துப் பாசலை விரிச்சு கழுவாத கையை வைக்கிறதோட இந்தக் கதைக்குள்ள என்ரராகிறான்.
நாலைந்து நாளாக அன்னந் தண்ணியை கண்டிராத பொடியன் அவக் அவக்கென்டு குனிந்த தலை நிமிராமல் பூசணிக்காயயும் சோத்தயும் திண்டு முடிச்சிட்டு அரை வயிறு கால்வயிற்றோட நிமிர்ந்து பார்த்தான். கொஞ்சத் தூரம் தள்ளி ஒரு வாகனத்தைச் சுற்றி சனம் நின்று முண்டியடிக்குது. இவன்ர மூளைக்குள்ள மின்னல் வெட்டி மறையுது. அடுத்த பார்சல் ரெடி. பாய்ந்து போனான். முப்பத்து சொச்ச தாவலில ஆள் கூட்டத்தில என்ரர் . இப்பிடி கூட்டங்களுக்க நுழையிறது வேலி தாவிறது பிரிக்கிறதில இவனுக்கு ஊரிலயே நல்ல எக்ஸ் பீரியன்ஸ் இருந்தது. அதனால தான் றொக்கட் என்ற பெயர் ஊரில அடிபட்டது.
இதை விட ஆள் இயக்கத்தில பதினொரு நாள் றெயினிங் வேற எடுத்திருக்கிறான். நாற்பது சொச்ச பேருக்கு கீழாலையும் முப்பது சொச்ச பேருக்கு மேலாலையும் போய் வாகனத்துக்கு முன்னால நின்று இரண்டு கையையும் நீட்டி ‘சேர்… சேர்… நாலு நாளா சாப்பிடல… அம்மா அப்பாக்கும் ஏலாது சேர் மூன்று பாசல் தாங்கோ சேர் …’ என்று முகத்தயும் ஒரு மாதிரியா வைத்து கொண்டு கத்தினான். இவன் மட்டுமா கத்திறான்! செட்டிக்குளம் முகாமே கத்துது. இதுக்குள்ள இவன்ர முக அக்சனை ஆரும் கணக்கெடுத்த மாதிரி தெரியல. இயக்ககாரர் போட்ட பெரிய பெரிய பண்டுகளை எல்லாம் ஏறி கடந்து வந்த சனம் ஒரு லொறியை என்ன செய்யும்? சனத்தின்ட மூர்க்கத்துக்கு முன்னால லொறியில நிண்டு சாப்பாடு குடுத்தவை திணறிப் போச்சினம். லொறிய சுத்தி நின்று கத்துறதும் லொறிக்கு அடிக்கிறதுமாக சனமும் ஒரு மார்க்கமாத்தான் நிண்டினம். சாப்பாடு குடுக்கிறவை சிங்களத்தால ஏதோ பேசிப் போட்டு சாப்பாடு குடுக்கிறதை நிப்பாட்டிப் போட்டினம். சீன் இப்படி ஏறுக்கு மாறாக போய்க்கொன்டிருக்க ஆரோ ஓடிப்போய் ஆமிக்குச் சொல்லிப் போட்டினம். கொஞ்ச ஆமிக்காரர் பாய்ந்தோடி வந்திச்சினம். ஊரில முயல் பிடிக்கிற ஆட்கள் கொண்டு திரியிற சைஸ் பொல்லுகளோட வந்த வேகத்தில கொஞ்சப் பேருக்கு அடி. பிறகென்ன நிலமை சீர். எல்லாரையும் நிலத்தில இருக்க வைச்சாச்சு. சத்தம் போடமல் இருந்தால்தான் சாப்பாடாம். இதுக்குள்ள கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கதைக்கிற ஆமிக்காறன் ஒருத்தன் பேசினான் ‘ஏ ஒங்கள எல்லாம் பிரபாகரன் எப்படிட கொன்றோல் பண்ணினான்?"
முக ரியக்சனுகளை வைச்சுப் பார்க்கேக்க தங்கட வீரத்த நினைச்சு கொஞ்சத் தமிழர்கள் புளகாங்கிதப்பட்ட மாதிரித்தானிருந்தது. இவனுக்கு உதிலயெல்லாம் கவனமில்லை. எப்படியும் ஒன்றிரண்டு சோத்துப் பாசல் வாங்கிட வேணும். ஒன்றை தாய்க்காரிக்கு தின்ன குடுத்துட்டு மிச்சத்த வைக்க வேணும். இரவுப் பாடு என்ன மாதிரியோ தெரியாது எண்ட லைன்ல இவன்ர மூளை ஓடிக் கொண்டிருந்தது. கடுமையாக திங் பண்ணிப் பார்த்தான். ஒன்றும் சரியாகப் படவில்லை. கொஞ்சம் பொறுத்துத் தான் பார்ப்பமே எண்டிட்டு வடிவா நிலத்தில குந்தியிருந்து கொண்டு தலைய சுத்தி கூட்டத்தைப் பார்த்தான். எல்லா முகத்திலயும் சோத்துக் களை. ஒவ்வொரு முகமாக பார்த்து கொண்டு போனான். வலது பக்க தொங்கலில் பாலை மரத்தோட இருந்த முகம் இவனையே பார்த்துக் கொண்டிருந்தது. கண்ணை ஒரு முறை சுருக்கி யோசிச்சுப் பார்க்க… பாலன் எண்டது பிடிபட்டது.
பிறகென்ன இரண்டு பேரும் கட்டிப் புடிச்சு மாறி மாறி கொஞ்சிறது மாதிரியான சென்டிமென்ட் சீனை மனசுக்க ஓடவிட்டுப் பாருங்கோ .
பாலன் மன்னார்ப் பக்கத்துப் பொடியன். பிரச்சினை தொடங்க இடம் பெயர்ந்து வந்து இவனிருந்த வட்டககச்சிக்கு வந்திட்டான். ஆனால் அப்ப இவனுக்குப் பாலனை தெரியாது. பாலன் எங்கேயோ உடுப்புக் கடையில நிண்டிருக்கான் இவன் லாலா அண்ணயின்ர மில்லில வேலை செய்தான். சின்ன வயசில வேலைக்கு போயிற்றான். கொஞ்ச நாளில எல்லைப் படை ரெயினிங் எடுத்து லைனுக்கு போன லாலா அண்ணை செத்து போனார். பிறகு சுந்தரி அக்கா வந்து மில்லில நின்றா. இவன்தான் முழு வேலையும். சுந்தரியக்காவுக்கு இவனைப் பிடிக்கும். இவனுக்கு சுந்தரியக்காவைப் பிடிக்கும்.
அந்த ரைமிலதான் இவனுக்கு லவ் வந்தது. வசந்தி பெரிய எழுப்பமான ஐற்றம் என்றில்லாவிட்டாலும் ஓரளவு அம்சமான பெட்டை தான். இவன்ர லவ் ஸ்ரோரி இப்பிடி அமைஞ்சுது. அந்தப் பெட்டை கிளிநொச்சியில ஒரு கொமினிகேசன் சென்ரரில வேலை பார்த்தது. இவனுக்கு வட்டக்கச்சியை விட்டால் வேறு ஒரு இடமும் ஆக்கள் இல்லை. ஆனாலும் 077 என்றோ 021 என்றோ தொடங்கி பத்து நம்பர் வரத் தக்கதாக எழுதிக்கொண்டு போவான். கடைக்குப் போய் அதுட்ட குடுத்துட்டு நிப்பான். அதுவும் நம்பரை குத்தி குத்தி அடிச்சுக் கொண்டிருக்கும். பிறகு களைச்சுப் போய் துண்டத் திருப்பிக் குடுக்கும். கொஞ்ச நாளில அதுக்கு எல்லாம் விளங்கீற்றுது. பிறகென்ன, கிளிநொச்சியில இருக்கிற கடை முழுக்க ஐஸ்கிறிம் குடிச்சு லவ் பண்ணிச்சுதுகள்.
அப்பதான் வீட்டுக் கொராள் இயக்கத்துக்கு வரவேணும் எண்டது மாதிரியான றூள்ஸ் வந்துது. காணிக்கை மலருக்கு இவனும் மரியசீலியும்தான் பிள்ளையள். அவள் ஆறு மாசம் முதல் எங்கேயோ மண்ணெண்ணைக் கடை வைச்சிருக்கிற ஒருத்தனை லவ் பண்ணுறன் என்டும், கட்டினால் அவனைத்தான் கட்டுவன் எண்டும் ஒற்றக் காலில நிண்டு கட்டிக் கொண்டு போயிற்றாள். அவள் போனவள் போனவள்தான். பிறகு இஞ்சால் பக்கம் தலை வைச்சும் படுக்கிறதில்ல. இப்ப இவன் தான் ஒரு பொடியன். தான்தானே தாயைப் பார்க்க வேணும். தனக்கு பிரச்சனை வராது எண்ட மாதிரியான கணக்கைப் போட்டு கொண்டு திரிஞ்சான்.
ஒரு நாள் மில்லுக்குப் போகேக்க, நாலைஞ்சு இயக்கக்காரர் நிண்டு மறிச்சினம். அதில ஒரு வடிவான பொம்பிளப் பிள்ளயும் இருந்தா. கொஞசம் பெரிய மீசையோட, உடம்பாக இருந்த ஒராள் இவனோட கதைச்சார். மிச்ச ஆக்கள் எல்லாம் அந்தப் பெட்டயோடயே சிரிச்சுச் சிரிச்சுக் கதைச்சுக் கொண்டிருந்தினம். மீசைக்காரன் கேட்டார்
‘வீட்டில எத்தனை பேர்?’
‘ஒராள்….’
“நீர் தனிப் பிள்ளயோ?’
‘இல்ல அண்ண…அக்காவும் இருந்தவா. ஆனால் அவ ஒருத்தனோட ஓடிற்றா…இப்ப எங்கேன்றே தெரியாது. நான்தான் உழைக்கிறன். அம்மாக்கும் ஏலாது.’
‘தம்பி… தம்பி நிப்பாட்டு. என்ட பேர் பாயும்புலி. எனக்கும் நிறைய குடும்பப் பொறுப்பு இருந்தது. ஆனால் அதை விடப் பெரிசு….'
என்று நீளமாக லெக்சர் ஒன்று அடிச்சுப் போட்டு, ‘இப்ப போய் வீட்டுக்குரிய ஏற்பாடுகளைச் செய்திட்டு இரண்டு நாளில சேர்ந்திடணும்’ என அனுப்பி விட்டார்.
இவனுக்கு அன்று மில்லுக்குப் போக மனம் வரவில்லை. வீட்டுக்குப் போய்ப் படுத்திட்டான். அடுத்த நாள் இவன்ர வீட்டிலயே ரவுண்டப் பண்ணி ஆக்கள் பிடிக்கேக்க, இவனையும் பிடிச்சுப் போட்டினம். பத்துப் பதினைஞ்சு பேரைச் சின்ன ஜீப்பில அடைஞ்சு கொண்டு போச்சினம். ஆரோ ஒரு பெட்டையையும் பிடிச்சு ஏத்தியிருந்தினம். அது அழுது கொண்டிருந்தது. அந்தக் கவலையிலும் அதோட ஒட்டுப் பட்டுக் கொண்டுபோனது இவனுக்குக் கிளுகிளுப்பாகயிருந்தது.
முத்தையன்கட்டுக் காட்டுக்க ரெயினிங். கிறிஸ்துதாஸன் எண்டும் ரொக்கட் எண்டும் ஊரில அடிபட்ட பேரைப் போர்ப்புலி எண்டு மாத்திச்சினம். அன்று கக்கூசுக்குள்ள போயிருந்து கொண்டு தன்ர கையிரண்டையும் புலியின் நகம் போல விரித்து, பற்களைப் பெரிதாக காட்டி, புலிமாதிரி ஒரு முறை சீறிப் பார்த்தான். இவனுக்கு இந்தப் பேர் பிடிக்கயில்லை. ஏதாவது இங்கிலிஸ் பேர் – றெக்ஸ், அலெகஸ், ஜேம்ஸ், அல்லது பண்டாரவன்னியன், சங்கிலியன், கரிகாலன், கடாபி, காமினி, லலித் எண்ட மாதிரியாவது வைச்சிருந்திருக்கலாம். ஆனால், மாஸ்ரர் வைச்ச பேரை மாற்ற முடியாது. பேசாமல் இருந்து விட்டான். ரெயினிங் காம்பிலதான் பாலன் இன்ரடியுஸ் ஆகிறான். ரெண்டு பேரும் ஒரே ரீம். பக்கத்துப் பக்கத்துப் படுக்கை. இவனும் வீட்டுக்குத் தனி ஆம்பிளைப் பிள்ளை.
இவன் பதினொரு நாள்த் தான் ரெயினிங் எடுத்தான். ஏ.கே எல்லாம் கழட்டிப் பூட்டுவான். பன்னிரண்டு ரவுண்ஸ் டச் அடிச்சிருக்கிறான். அதில ஒண்டு புள். ஒன்பது காடு. சத்தியப் பிரமாணம் தரோவான பாடம்.
இவன் ரெயினிங் காம்பில இருந்து ஓட முடிவெடுத்தான். பாலனைக் கேட்டான். அவன் பயந்தவன். மறுத்து விட்டான். அன்றிரவு இவனுக்கு இரண்டாவது சென்ரி. வெளிக்கிட்டு ‘பரலோகத்தில் இருக்கும் பிதாவே..’யும் ‘அருள் நிறைந்த மரியாவே…’ யும் சொல்லிக்கொண்டு அருவியை பிடித்து நடந்தான். பெருங்காடு. யேசுவும் மரியாளும் துணையிருக்க, பரந்தன் – புதுக்குடியிருப்பு றோட்டில ஏறி, அடுத்த நாள் வீட்டுக்கு வந்து சேர்ந்திட்டான் . தாய்காரியிட்ட சொல்லிப் போட்டு இரவோடு இரவாக புதுக்குடியிருப்பில இருக்கிற நட்சத்திரம் மாமா வீட்டுக்கு வந்திட்டான். பிறகு இவன் வட்டக்கச்சிக்கே போகவில்லை. கொஞ்ச நாளில வட்டக்கச்சி இடம் பெயர்ந்து அங்க வந்திது.
சனம் முழுக்க மாத்தளன், முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்துக்க அடைஞ்சு கிடந்த நாளில இவன் புதுக்குடியிருப்பு பக்கம் தேங்காய்க்கு வாறவன். ஒரு தேங்காய் ஐந்நூறுக்கு மேல போகும். இயக்கக்காரரின் ‘லைன்’ மட்டும் வருவான். அவ்வளவு துணிஞ்சவன். அப்படி வரேக்க ஒரு நாள் பாலனைக் கண்டிட்டான். ஒரு ஏ.கே யைக் கொழுவிக் கொண்டு ‘வோக்கி’ கதைச்சபடி வந்தான். இவனுக்கு பெருமையாய் இருந்திது. தன்னோட ‘ரெயினிங்’ எடுத்த பெடியன் ‘வோக்கி’யெல்லாம் வைச்சிருக்கிறான். பொறுப்பாளனாக வந்திட்டான் போல என்ற கணக்கில யோசிச்சு கொண்டு போய் கட்டிப் பிடிச்சுக் கதைச்சான். . அவன் நல்லா மாறியிருந்தான். நாங்கள் ஆமிக்காரனுக்கு நல்ல அடியாக ரெண்டு அடி குடுத்தால் போதும். தமிழ் நாட்டில கருணாநிதி ஆட்களும் கதைக்கினம். அவையளும் கொஞ்சம் கூட கதைக்க வேணும். ‘ஓட்டமற்றிக்’காக எல்லாம் சரியாகும். எண்ட ‘லைனில’ அவன்ர கதை இருந்திது. இவனுக்குத் தெரிஞ்ச ஒரே கருணாநிதி மூன்றாம் வகுப்பில் வகுப்பாசிரியராக இருந்த ஆள்தான். அந்த ஆள் வீட்டுப் பாடம் செய்யாவிட்டாலும் சரி பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் சரி எல்லாவற்றிற்கும் கடிதம் கொண்டு வா என்று நிற்கும்.
வீட்டில தாய்க்காரியிடம் வாய் ஓயாமல் பாலனைப்பற்றியும் அவன் சொன்ன கதைகளை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான். தாய்க்காரிக்கு இதில அக்கறையில்லை.  குடுக்குற கஞ்சியை நேரம் தவறாமல் வாங்கிறதிலதான் குறியாய் இருந்திது. ஒரு நிமிசம் வீட்டில இருக்கவிடாது. ஓடிப் போய் ‘லைனில’ நில் என்று கலைக்கும். இப்பிடித்தான் ஒரு நாள் வாளியோட போய் ‘லைனில’ நிற்க வயிற்றை தள்ளிக்கொண்டு வசந்தி வந்திது. இவனைக் கண்டதும் தலையில் போட்டிருந்த துவாயின்ர தலைப்பை வாய்க்க வைச்சு மூண்டாம் ஆளுக்குத் தெரியாம அழுகுது. அழுகை எண்டால் சும்மா அழுகை இல்லை. மும்தாஐ், ஐீலியட் அழுத அழுகை. அழுகைக்கிடையில் விக்கி விக்கி அது சொன்ன விசயம் இதுதான். ‘நான் என்ன செய்யிறது நீங்க போயிற்றியள் என்னையும் பிடிக்க வந்திச்சினம். வேற வழி தெரியாமல் கட்டிற்றன். அவர் நல்லவர்.’ அது அழுகையை நிப்பாட்டுதில்லை. இவனுக்கு அது இல்லாமல் போனதால பெரிய நட்டமில்லை. வசந்தி இல்லாவிட்டால் என்ன ஒரு சுகந்தி இல்லாமலா போகும் என்ற மாதிரியான ‘ரைப்’. ஆனாலும் முன்னால் ஒரு பெட்டை அழுதுகொண்டிருக்கேக்க அது மாதிரியான ‘றியாக்ஸனை’க் காட்டுறதுதானே முறை. கண்ணைக் கசக்கிக் கொஞ்சம் கலங்க வைச்சிட்டு, சிவாஜி கணேசன் மாதிரி வானத்தையும் பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நாலு எட்டு அங்கயும் இங்கயும் எடுத்து வைச்சிட்டுச் சொன்னான்: “சரி சரி, அழாத நடந்தது நடந்திட்டுது, எல்லாம் எங்கட விதி. பிறக்கிறது ஆம்பிளைப் பிள்ளையாக இருந்தால் என்ர பேரை வை…” பிறகு அதுக்கும் கஞ்சி வாங்கிக் குடுத்திட்டு, தானும் வாங்கிக் கொண்டு வந்தான். அதுக்குப் பிறகு அவளையோ பாலனையோ காணவில்லை. இப்ப பாலனைக் காணுறான்.
பாலன், இவனைக் கட்டிப் பிடிக்க வந்தான். இவனும் விடயில்லை. கதையோட கதையாக இடையில் வானத்தைப் பார்த்துச் சொன்னான்:
“சீ… எல்லாம் அநியாயம்”
அந்த ‘ரைம்’ திரும்பவும் ‘பார்சல்’ குடுக்கத் தொடங்கிச்சினம். ரெண்டு பேரும் கூட்டத்துக்குள்ள புகுந்து உள்ள போச்சினம். இவன், ஒரு மனிசனுக்குப் பின்னால நிண்டு, ரெண்டு கையையும் நீட்டினான். ரெண்டு கையிலயும் பார்சலை வைச்சினம். ‘யேசுவே’ என்றபடி திரும்ப, பின்னுக்கு மூன்று பார்சல்களுடன் பாலன் நின்றான்.
மூன்றாம் நாள். நல்லா விடிஞ்சும் இவன் எழும்பயில்லை. ‘ரென்ற்’ வெக்கை காலையில் இதமாயிருந்திது. தாய்க்காரிதான் அடிக்காத குறையாக உலுப்பி எழுப்பிச்சுது. எரிச்சலுடன் எழும்பியிருந்தான். மனுசி  சதுரம் பதறியபடி நிக்குது.
“டேய் தம்பி, ‘ரவுண்டப்’ அட. எனக்கெண்டால் என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல…”
இவனுக்கு மின்னல் மூளைக்குள் அடித்தது. ஏற்கனவே ரெடி பண்ணி வைச்சிருந்த, ‘ஸ்ரோறியை’ மனதுக்குள் ஓடவிட்டான். “சேர்..நான் ஒரே பிள்ளை… அம்மாக்கும் ஏலாது. நான்தான் பாக்க வேணும். நான் இயக்கத்தில இருக்கயில்லை. கொஞ்ச நாள் சம்பளத்துக்கு வேலை செய்தனான்”
தியானப் பொசிசனில கண்ணை மூடிக் கொண்டிருந்தவன், எழும்பி வெளியல வந்தான். “எல்லா ஆம்பிளயளையும் ரவுண்டப்புக்கு வரட்டாம். நீ வரயில்லையா? பேயன் மாதிரி வராத… இது மாதிரி எதாவது செற் அப்போட வா” என தான் தூக்கிக் கொண்டு போன குழந்தையைக் காட்டிவிட்டுப் போனான் பரமு.
இவன் வெளிக்கிட தாய்க்காரியும் கூடவே வெளிக்கிட்டுது. இவன் அதட்டி, நிற்பாட்டிப் போட்டான். தனியாகத்தான் போனான்.
கிறவுண்டில சகல ஆம்பிளையளும் குந்தியிருக்க வைக்கப் பட்டிருந்திச்சினம்.
கிறவுண்டைச் சுத்தி நிறைய ஆமிக்காரர். இரண்டு மூன்று மேசையும் கதிரையும் போடப் பட்டிருந்தன. ஏதோ பதியிறதுக்கு ரெடியாகவும் கொஞ்ச ஆமிக்காரர் நிக்கினம். நல்ல வெள்ளையும் சுள்ளையுமாக இருந்த ஒருத்தன் – அநேகமாக முஸ்லிமாக இருக்கவேணும் – முன்னுக்கு வந்து சொன்னான்: “அங்க ஆரும் எல்.ரி.ரி.ஈ காரர் இருந்தால், எழும்பி முன்னுக்கு வாங்க. ஒரு பிரச்சினையும் இல்ல. நாங்க விசாரிச்சுப் பதிஞ்சிட்டு விடுவம்…”
பொடியள் மட்டம், வயசாளியள் என பல தரத்திலயும் எழும்பிப் போயினம். எழும்பும்போதே ஒண்டு கேட்டுது… “சேர், நான் ரெண்டு நாள்தான் இருந்தனான். சேர் … நானும் வரவேணுமே….”
“பரவாயில்ல வாங்க… ஒரு நாள் இருந்தாலும் வாங்க…”
இவனுக்குச் சதுரமெல்லாம் நடுங்கத் தொடங்கிச்சுது. பதினொரு நாள் இருந்திருக்கிறான். ஏ.கே கழற்றிப் பூட்டுவான். பன்னிரண்டு ரவுண்ஸ் அடிச்சிருக்கிறான். கண்ணை மூடிக் கொண்டு, ஒரு முறை செபம் சொன்னான்.
மெனிக் பாம் புழுதியைக் கிளப்பிக் கொண்டு, ஒரு பவள் வந்தது. அந்த ரென்சனான நேரத்திலயும் இவனுக்கு சினிமாக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. வில்லனின் வாகனம் எல்லாச் சினிமாவிலயும் இப்பிடித்தான் வரும். வாகனம் நின்றவுடன் கதவு திறக்கும். வில்லன் ஒற்றைக் காலை எடுத்து வைப்பார். கமெரா காலடியில இருந்து மேல போகும். கடைசியாக முகத்தைக் காட்ட, முகமே தெரியாமல் கருகருவென்ற தாடிவளர்த்த முகம் இருக்கும்.
வாகனத்திலயிருந்து ஒரு உருவம் இறங்கியது. முகமே தெரியவில்லை. அடையாளந் தெரியாத மாதிரி, கறுப்புத் துணியினால் முகம் மறைக்கப்பட்டிருந்தது. இரண்டு கண்ணுக்கும் மூக்குக்குமாக துணியில் மூன்று ஓட்டைகள். தமிழனுக்குத் தலையாட்டியைத் தெரியாதா என்ன? இவனுக்கு அடிவயிறு குளிர்ந்தது. அந்த உருவம் நடந்து வாறதைப் பார்க்க, எங்கோ பார்த்த மாதிரியிருந்தது.
ஒவ்வொருத்தராக எழும்பித் தலையாட்டியின் முன்னால் வந்து விட்டுப் போகலாம் என்றார்கள். ஒவ்வொருத்தராகப் போய்க் கொண்டிருக்குது சனம். இவன் கொஞ்சம் பின்னடிச்சான். கொஞ்சம் லேற்றானால், தலையாட்டி களைச்சிடுவான். தெரிஞ்ச ஆளெண்டாலும் விட்டிடுவான் என்று நினைச்சான்.
தலையாட்டியும் இடைக்கிடை தலையை ஆட்டிக் கொண்டுதானிருந்தான். தலையாட்டுப் படுகிற ஆள், அங்கால ரெடியாக நிற்கிற பஸ்ஸில ஏற்றப்படுகிறார். அந்த உருவத்தின் அக்சன், உடம்புக்கட்டு, நடை எல்லாம் எங்கயோ தெரிஞ்ச ஆள் எண்டது மட்டும், இவனுக்கு விளங்குது. ஆரெண்டது மட்டும் பிடிபடுகுதில்லை.
நடக்கிறது நடக்கட்டும் எண்டு எழும்பினான். ஒரு பிதா சுதன் போட்டிட்டு, தலையைக் குனிஞ்சு கொண்டு போனான். வரிசை மெதுவாகப் போகுது. தலையாட்டிக்கு கிட்ட வரவர கால் உதறத் தொடங்கியது. சமாளிச்சுக் கொண்டு போய் நிண்டான். முகத்தை மிக அப்பாவித்தனமாக வைச்சுக் கொண்டு, தலையாட்டியின் கண்ணுக்கு நேராக, இருந்த ரண்டு துளைகளையும் உற்றுப் பார்த்தான். சில செக்கன் மௌனத்தின் பின், அந்த உருவம் தனது தலையை மேலிருந்து கீழாக ஒரு முறை அசைத்தது,
இவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆமி விடயில்லை. காணிக்கை மலரும் வந்து நிலத்தில ஒரு பாட்டம் விழுந்து குழறிப்பாத்தது. ஆமிக்காரர் நிறையச் சமாதானம் சொல்லி, தாய்க்காரியை அனுப்பிப் போட்டு, இவனைப் பஸ்ஸில ஏத்திச்சினம். மெனிக்பாம் செம்பாட்டு மண்ணில உருண்டு அழுது, உடம்பெல்லாம் செம்பாடு பத்திப் போய் நிக்கிற தாய்க்காரியைப் பார்க்க இவனுக்கு அழுகை பொத்திக் கொண்டு வந்தது. பஸ் யன்னலில முகத்தை வைச்சுக் கொண்டு அழுதான். கொஞ்ச நேரம்தான். பிறகு, ஒரு வைராக்கியம் வந்தவனாக, இறுகிய முகத்துடன் விறைத்து உட்கார்ந்திருந்தான்.
தலையாட்டப்படுகிற ஆட்கள் பஸ்ஸில ஏறிக் கொண்டிருந்தனர். யாரோ ஒருவன், பஸ்ஸினுள் பின்பக்கமாக நின்று தூசணத்தால், யாரையோ திட்டிக் கொண்டிருந்தான். திரும்பிப் பார்த்தான். பாலன். இவனைக் கண்டதும் பாலனுக்குக் கண் கலங்கிவிட்டுது. பக்கத்தில் வந்திருந்தவனுக்கு, மூச்சு வாங்கியது. மூச்சை உள்ளிழுத்து ஆசுவாசப்படுத்தியவன்,
“மச்சான், தூத்தேறியாலதானே எனக்கு அங்கயும் சனியன் பிடிச்சது. வம்பில பிறந்தது. பிறகு இஞ்ச வந்தும், எங்களத்தானே பிடிக்கிது…”
அவனுக்கு மூச்சு கடுமையாக வாங்கியது. அந்த முகமூடி மனிதனைத்தான் திட்டுகிறான் என்பது புரிந்தது. யாரந்த மனிதன், என்பதை அறியவேண்டும் என்ற ஆவல் இவனுள் ஏற்கனவே இருந்ததுதான்.
“ஆர் மச்சான் அவன்?”
பாலன் ஒரு முறை இவனை மேலும் கீழுமாகப் பார்த்தான். பிறகு, மெல்லிய குரலில் சொன்னான் : அந்த உறண்டல்தான் பாயும்புலி. ◄ 'தேவதைகளின் தீட்டுத்துணி' தொகுப்பிலிருந்து | https://profiles.google.com/bloggergopi/posts/5uYLBnL8zEB

No comments:

Post a Comment